July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச பளுதூக்கல் போட்டியில் களமிறங்கும் யாழ்.வீராங்கனை ஆர்ஷிகா

இந்த ஆண்டு இறுதியில் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் உலக பளுதூக்கல்  சம்பியன்ஷிப் ஆகிய தொடர்களுக்கான இலங்கை அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா இடம்பிடித்துள்ளார்.

குறித்த இரண்டு தொடர்களிலும் பங்குபற்றவுள்ள 20 பேர் கொண்ட இலங்கை அணிக் குழாத்தை இலங்கை பளுதூக்கல் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதன் பெண்கள் பிரிவில் வடக்கின் நட்சத்திர பளுதூக்கல் வீராங்கனையான விஜயபாஸ்கர் ஆர்ஷிகா பெயரிடப்பட்டுள்ளார்.

முன்னதாக இவ்வருட முற்பகுதியில் பொலன்னறுவையில் நடைபெற்ற இலங்கை பளுதூக்கல் அணிக்கான வீரர்களை தெரிவு செய்கின்ற போட்டியில் திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன்படி, இம்முறை பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 64 கிலோ கிராம் எடைப் பிரிவில் ஆர்ஷிகா போட்டியிடவுள்ளார்.

2016 இல் மலேஷியாவில் நடைபெற்ற பொதுநலவவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆர்ஷிகா, இறுதியாக கடந்த 2019 இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் உலக பளுதூக்கல்  சம்பியன்ஷிப் ஆகிய இரண்டு போட்டிகளும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி  முதல் 17 ஆம் திகதி வரை உஸ்பெகிஸ்தானின் டஸ்கென்ட் நகரில் நடைபெறவுள்ளது.