July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் மேலும் நான்கு வீரர்கள்

ஓமான் தொடர் மற்றும் ஐ.சி.சி.டி-20 உலகக் கிண்ணத் தொடர் என்பவற்றுக்கான இலங்கை குழாத்தில் மேலும் 4 வீரர்களை இணைத்துக் கொள்ள இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த மாதம் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டி-20 போட்டியில் குசல் பெரேரா தசைப்பிடிப்பு உபாதையால் பாதிக்கப்பட்டார்.அதே நேரத்தில் சகலதுறை வீரர் லஹிரு மதுஷங்க தோள்பட்டை உபாதைக்குள்ளாகினார்.

இதனால், குறித்த இரண்டு வீரர்களுக்கும் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள டி-20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டது.

எனினும், இவர்களில் குசல் பெரேரா மீண்டும் அணிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டாலும், லஹிரு மதுஷங்க விலகிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில், உலகக் கிண்ணத்துக்கு முன் நடைபெறவுள்ள ஓமான் சுற்றுப்பயணம் மற்றும் டி-20 உலகக் கிண்ணம் ஆகிய இரண்டு தொடர்களுக்கும்  புதிதாக நான்கு வீரர்களை இணைத்துக் கொள்ள இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, ரமேஷ் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, அஷேன் பண்டார மற்றும் லக்‌ஷான் சந்தகன் ஆகிய நான்கு வீரர்களை மேலதிக வீரர்களாக இலங்கை குழாத்துடன் இணைந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.