July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் போட்டிகளை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி

ஐ.பி.எல் போட்டியின் 2 ஆவது பகுதி ஆட்டங்களை நேரில் பார்க்க மைதானத்தில் குறைந்த அளவிலான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் என்று ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வீரர்களிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல் போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

முதல் போட்டியில் நடப்புச் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் துபாயில் மோதுகின்றன.

இந்த நிலையில், 2 ஆவது பகுதி ஆட்டங்களை நேரில் பார்க்க துபாய், சார்ஜா, அபுதாபி மைதானங்களில் ரசிகர்கள் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போது ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டாலும் எண்ணிக்கை அளவு வெளியிடப்படவில்லை. எனினும், மைதானத்தின் மொத்த இருக்கை அளவில் 50 வீத அளவுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது இவ்வாறிருக்க, ரசிகர்களுக்கான டிக்கெட் விற்பனை இன்று (16) முதல் ஆரம்பமாகியுள்ளது.