July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்தார் லசித் மாலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சொந்த காரணங்களால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இலங்கை அணியில் விளையாடாமல் இருந்த மாலிங்க, டி-20 உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடும் ஆர்வத்தில் இருந்த நிலையிலேயே இந்த திடீர் ஓய்வை அறிவித்துள்ளார்.

எனவே, லசித் மாலிங்கவின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் ஓய்வு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்தப் பதிவில் 17 ஆணடுகளாக தேசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நான் பெற்றுக்கொண்ட அறிவு,அனுபவம் இனிமேலும் கிரிக்கெட் மைதானத்தில் தேவைப்படாது என நினைக்கிறேன்.ஏனெனில், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி துரும்புச் சீட்டாக இருந்த டி-20 போட்டிகளுக்கும் விடைகொடுக்க இன்று நான் தீர்மானித்துள்ளேன்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

38 வயதாகும் லசித் மாலிங்க கடந்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தார்.

எனினும்,தொடர்ந்தும் டி-20 போட்டிகளில் விளையாடுவதாக தெரிவித்திருந்த லசித் மாலிங்க,அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமாகிய லசித் மாலிங்க, சுமார் 17 ஆண்டுகளாக இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தார்.

இலங்கை அணிக்காக 170 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், சர்வதேச டி-20 போட்டிகளில் 107 விக்கெட்டுகளையும், ஐ.பி.எல் போட்டிகளில் 170 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.