July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரவி சாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணியில் நால்வருக்கு கொரோனா தொற்று

Photo: BCCI

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்து இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருக்கும் நிலையில், தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  இந்திய அணியினருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து  ரவி சாஸ்திரியுடன் தொடர்பில் இருந்த பந்து வீச்சுப் பயிற்சியாளர் அருண், களத்தடுப்பு பயிற்சியாளர் ஸ்ரீதர், உடற்கூற்று மருத்துவர் நிதின் படேல் உள்ளிட்டோர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், இந்திய வீரர்கள் எவருக்கும் இதுவரைக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

எவ்வாறாயினும், தற்போது நடைபெற்று வரும் போட்டியில் இந்திய வீரர்கள் இங்கிலாந்து வீரர்களை தொட்டு பேசக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.