July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை-தென்னாபிரிக்க தொடருக்கான வர்ணனையாளர்கள் விபரம் வெளியானது

இலங்கை-தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஒருநாள் மற்றும் டி-20 தொடரின் போது கடமையாற்றவுள்ள தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தென்னாபிரிக்கா – இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி-20 தொடர் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், குறித்த தொடருக்கான தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பிரபல்யமிக்க கிரிக்கெட் வர்ணனையாளர்களில் ஒருவரான ரொஷான் அபேசிங்க இலங்கை – தென்னாபிரிக்க தொடரில் பணிபுரியவிருக்கின்றார்.

இதனிடையே, அண்மையில் நிறைவுக்கு வந்த இந்தியாவுடனான டி-20 தொடரில் வர்ணனையாளராக அறிமுகமான இலங்கையின் முன்னாள் சகலதுறை வீரர் பர்வீஸ் மஹரூப்பும் இந்தத் தொடரில் வர்ணனையாளர்களில் ஒருவராக பணியாற்றவுள்ளார்.

அதேநேரம், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆமிர் சொஹைல், ஜிம்பாப்வேயின் முன்னாள் வீரரான எம்ப்யுமிலலோ எம்பாங்வா மற்றும் தென்னாபிரிக்காவின் நீல் மென்தோர்ப் ஆகியோரும் இந்த தொலைக்காட்சி வர்ணனையாளர் குழாத்திற்குள் அடங்குகின்றனர்.

இதனிடையே, இலங்கை அணி விளையாடுகின்ற பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய தொலைக்காட்சி வர்ணனையாளர்களில் ஒருவராக செயல்படும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர்களில் ஒருவரான ரசல் அர்னோல்ட், இந்தத் தொடரில் இடம்பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.