July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தானின் இளம் கால்பந்து வீரர் அமெரிக்க விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம்

அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய இளையோர் கால்பந்து அணியின் 17 வயது இளம் வீரர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா சென்ற விமானப் படையின் USAF Boeing C-17 இராணுவ விமானத்தின் பக்கவாட்டில் தொங்கியபடி பயணித்த மூவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்தனர்.

விமானத்தில் இருந்து உடல்கள் கீழே வீழ்கின்ற வீடியோக் காட்சிகள் சமூக ஊடகத் தளங்களில் வெளியாகி இருந்தன. அவ்வாறு வானிலிருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவரே இளம் வீரர் ஷாகி அன்வாரி (Zaki Anwari) என்பது நண்பர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் விளையாட்டு அமைச்சர் இந்தச் செய்தியை பின்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தேசிய கால்பந்து வீரர்கள்,பயிற்றுவிப்பாளர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் வீரர் அன்வாரியின் ஈடுசெய்ய முடியாத இழப்புக்கு தமது ஆழ்ந்த கவலைகளை பகிர்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவின் இராணுவப் போக்குவரத்து விமானம் காபூல் சர்வதேச வான் தளத்தில் இருந்து புறப்பட்ட சமயம் பல நூற்றுக்கணக்கான ஆப்கானிய இளைஞர்கள் அந்த விமானத்தில் ஏறிக்கொள்ள முண்டியடித்தனர்.

இடம் கிடைக்காத பலர் விமானம் ஓடத்தொடங்கியதும் அதன் பக்கவாட்டில் தொற்றி ஏறிக் கொண்டனர். அந்த விமானத்தில் அதன் கொள்ளளவை விடவும் ஐந்து மடங்கு அதிகமாக – சுமார் 640 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தின் சக்கரப் பகுதியில் சடலம் ஒன்று சிக்குண்டமை தெரிய வந்ததையடுத்து பயண வழியில் அந்த விமானம் பாதுகாப்புக் கருதி அவசரமாக கட்டாரில் தரையிறங்கிச் சென்றது.

வீரர் அன்வாரியின் உடல் எச்சங்களே சக்கரப் என்ற பகுதிக்குள் சிக்குண்டிருந்தன என்று சில செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

விமானத்தின் வெளிப்பகுதியில் ஏறிப் பயணம் செய்த சிலர் உயிரிழந்தமை தொடர்பாக விசேட விசாரணை ஒன்றை நடத்தவுள்ளதாக அமெரிக்க விமானப் படை தெரிவித்துள்ளது.

19 வயதான ஷாகி அன்வாரி ஆப்கானிஸ்தானை அமெரிக்கப் படைகள் கைப்பற்றிய பின்னர் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறை வாலிபர் ஆவார்.

அவரது வயதை ஒத்த ஏனைய பலரைப் போன்றே தலிபான் இயக்கத்தின் கொடுமைகளை தனது பெற்றோர் மூலமாகவே தெரிந்து வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.