
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தனது அதிகாரபூர்வ பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலைத்தளங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
44 வயதான அவிஷ்க குணவர்தன, இலங்கை சார்பில் ஆறு டெஸ்ட் மற்றும் 61 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதனிடையே, இலங்கை A அணியின் பயிற்சியாளராக பணியாற்றியுள்ள அவர், சூதாட்ட சர்ச்சையில் இடைநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு இலங்கை கிரிக்கெட் சபையின் பயிற்சியாளர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.
இதனிடையே, அவிஷ்கவுக்கு ஐசிசியினால் விதிக்கப்பட்ட தடை கடந்த மே மாதம் நிறைவுக்கு வந்ததையடுத்து அவருக்கு மீண்டும் கிரிக்கெட்டுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை அவிஷ்க குணவர்தன ஏற்றுக் கொண்டுள்ளார்.
எனினும், பயிற்சியாளர் பதவி எத்தனை ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விடயங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளதுடன், குறித்த தொடரிலிருந்து அந்த அணியின் பயிற்சியாளராக அவிஷ்க குணவர்தன இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் ஷோன் டைட் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும், தலிபான்கள் கிரிக்கெட் விளையாட்டு மீது அன்பு, ஆதரவு அளிப்பவர்கள் என அந்நாட்டு கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹமித் ஷின்வாரி உறுதியளித்துள்ளார்.
எது எவ்வாறாயினும், ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் முன்பு இருந்ததை போலவே கிரிக்கெட்டை தொடரலாம் என்று அறிவித்துள்ளார்கள்.