July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியானது: ஒக்டோபர் 24 இந்தியா – பாகிஸ்தான் மோதல்!

ஐசிசி டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ளது.

இதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி ஒக்டோபர் 24ஆம் திகதி துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தகுதிச்சுற்றில் விளையாடவுள்ள இலங்கை அணி, தமது முதல் போட்டியில் நமீபியா அணியை எதிர்வரும் 18 ஆம் திகதி ஓமானில் சந்திக்கவுள்ளது.

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் ஒக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக் கிண்ணத்தில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதிப் பெற்றுவிட்டன.

மேலும் 4 அணிகள் தகுதிச்சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். முதலில் இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய இராச்சியம் மற்றும் ஓமானில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தத் தொடரில் சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை ஐசிசி ஏற்கெனவே வெளியிட்டது அதன்படி குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1-இல் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் உள்ளன.

ஏ பிரிவு தகுதிச்சுற்று வெற்றியாளரும், பி பிரிவு தகுதிச்சுற்றின் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொள்ளும் அணியும் விளையாட உள்ளனர்.

குரூப் 2-வில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ளன. பி பிரிவு தகுதிச்சுற்று வெற்றியாளரும், ஏ பிரிவு தகுதிச்சுற்றின் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொள்ளும் அணியும் விளையாட உள்ளனர்.

இதனிடையே, ஐசிசி டி-20 உலகக் கிண்ணப் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

தகுதி சுற்றுப் போட்டிகள் ஒக்டோபர் 17ஆம் திகதி ஓமானில் தொடங்குகிறது. இதில் ஓமான், பப்புவா நியூகினி, இலங்கை, நமீபியா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இதில் தகுதிப்பெறும் நான்கு அணிகள் சுப்பர் 12 சுற்றில் விளையாடும்.

சுப்பர் 12 சுற்றில் முதல் போட்டி ஒக்டோபர் 23-இல் நடைபெறுகிறது. இதில் அபுதாபியில் நடைபெறும் போட்டியில் அவுஸ்திரேலியா – தென்னாபிரிக்கா அணிகள் மோதுகின்றன.

அதே நாளில் இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் துபாயில் மோதுகின்றன.

டி-20 உலகக் கிண்ணத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி துபாயில் அக்டோபர் 24-இல் மோதுகின்றன.

ஒக்டோபர் 31-ஆம் திகதி இந்தியா – நியூசிலாந்தை சந்திக்கிறது. நவம்பர் 3ஆம் திகதி ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. பின்பு நவம்பர் 5 இல் தகுதிச்சுற்றின் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடனும், நவம்பர் 8ஆம் திகதி தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் மோதுகிறது.

இதேவேளை, முதல் அரை இறுதிப் போட்டி அபுதாபியில் நவம்பர் 10ஆம் திகதியும், 2வது அரை இறுதி துபாயில் 11ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி நவம்பர் 14ஆம் திகதி துபாயில் நடைபெறும்.