July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லோர்ட்ஸ் மைதானத்தில் புதிய பார்வையாளர் அரங்கை சங்கக்கார திறந்து வைத்தார்

Photo: Lord’s Cricket Ground Twitter

இங்கிலாந்தின் லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பார்வையாளர் அரங்கினை இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவருமான குமார் சங்கக்கார திறந்து வைத்தார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார, மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.

இந்த நிலையில், லோர்ட்ஸ் மைதானத்தில் 53 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட காம்ப்டன் மற்றும் எட்ரிச் அரங்கை குமார் சங்கக்கார அண்மையில் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். இந்திய, இங்கிலாந்து 2 வது டெஸ்ட் போட்டியின்போதே இந்த புதிய அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த அரங்கிற்கு, கொம்ப்டன் மற்றும் எட்ரிச் அரங்கு என பெயரிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த அரங்கின் நிர்மாணப் பணியானது கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கொவிட்-19 தொற்று மற்றும் ஏனைய சவால்களை தாண்டி இந்த அரங்கு 18 மாதங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரங்கானது இங்கிலாந்தின் முன்னாள் வீரர்களான டெனிஸ் கொம்ப்டன் மற்றும் பில் எட்ரிச் ஆகியோரை கௌரவப்படுத்தும் முகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் MCCயின் முக்கிய அதிகாரிகள் மற்றும் டெனிஸ் கொம்ப்டன் மற்றும் பில் எட்ரிச் ஆகியோரின் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.

புதிய அரங்கத்தை திறந்து வைத்த பின்னர் கருத்து வெளியிட்ட குமார் சங்கக்கார,

இந்த அரங்கத்தை திறந்து வைப்பதை பெருமையாக கருதுகிறேன். எனது பதவிக்காலத்தில், MCC மைதானத்தை உலகின் முன்னணி மைதானங்களில் ஒன்றாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளேன். இந்த புதிய அரங்கில், ரசிகர்கள் எதிர்காலத்தில் கிரிக்கெட்டை பார்வையிடுவார்கள் என்ற குறிக்கோள் நனவாகியமை மகிழ்ச்சியளிக்கிறது.

அத்துடன், இந்த மறக்க முடியாத நிகழ்வில் டெனிஸ் கொம்ப்டன் மற்றும் பில் எட்ரிச் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்தமை மகிழ்ச்சி. குறித்த இருவரும் நட்சத்திர வீரர்கள். அவர்கள் விளையாடுவதை பார்க்க சிறப்பாக இருக்கும். அவர்களின் பிரகாசிப்புகள் எதிர்வரும் காலங்களிலும் மறக்க முடியாத ஒன்று. அத்துடன், எதிர்வரும் காலங்களிலும் MCC மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க விடயங்கள் நடைபெறும் என்பதில் எந்தவித சந்தேகங்களும் இல்லை என தெரிவித்தார்.