July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க கிரிக்கெட் அணியில் இணையவுள்ள மூன்று இலங்கை வீரர்கள்?

குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகிய மூன்று இலங்கை வீரர்களும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, அமெரிக்க கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடுவதற்கான ஆயத்தங்களை முன்னெடுத்து வருவதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கொவிட்19 கட்டுப்பாட்டு வலயத்தை மீறிய குற்றத்திற்காக அண்மையில் குறித்த மூன்று வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட் சபையினால் போட்டித் தடையும், அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனிடையே, ஒழுங்கு நடவடிக்கைக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட குறித்த மூன்று வீரர்களும் இலங்கை கிரிக்கெட் அணியுடன் மீண்டும் ஒரு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்த தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், போட்டித் தடைக்கு உள்ளான குறித்த மூன்று வீரர்களும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடுவதற்கான ஆயத்தங்களை முன்னெடுத்து வருகின்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அமெரிக்காவில் தற்போது வசித்து வருகின்ற இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் கடமையாற்றிய முன்னாள் அதிகாரியொருவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, குறித்த மூன்று வீரர்களுக்கும் விதிக்கப்பட்ட ஒரு கோடி ரூபா அபராதத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை எனவும் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.