July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் சிரேஷ்ட வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அழைப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களுக்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று (19) நடைபெறவுள்ளது.

இதன்படி, அஞ்சலோ மெத்யூஸ், திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமான்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகிய நால்வருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், இந்த சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளும், இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வீரர்களின் வருடாந்த ஒப்பந்தம் தொடர்பிலும், இலங்கை அணிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, இலங்கை கிரிக்கெட் அணி மோசமான பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு முன்கொண்டு செல்லும் முயற்சியாக இந்த கலந்துரையாடல் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இலங்கையின் முன்னாள் தலைவர்களோடு, கிரிக்கெட் சார் அங்கத்தவர்களுக்கும் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கலந்துரையாடலும் மிக விரைவில் இடம்பெறும் என விளையாட்டுத்துறை அமைச்சு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.