![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/uganda.jpg?fit=800%2C450&ssl=1)
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்ற சென்ற உகண்டா நாட்டு வீரர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உகண்டா சார்பில் 9 பேர் கொண்ட அணி கடந்த ஜூன் 19ஆம் திகதி நரிட்டா விமான நிலையம் வந்தடைந்தனர்.
இதில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட, மற்றவர்கள் டோக்கியோவிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒசாகாவின் இசுமிசானோ ஹோட்டலுக்கு மாற்றப்பட்டனர். இதனிடையே, அங்கு சென்ற மற்றொருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 7 ஆம் திகதி முதல் உகண்டா அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதில் 20 வயதான பளுதூக்குதல் வீரர் ஜூலியஸ் செகிடோலெகோ, வெள்ளிக்கிழமை அதிகாலை 12:30 மணி வரை ஹோட்டலில் இருந்துள்ளார்.
எனினும், மறுநாள் காலையில் அவர் பயிற்சிக்கு வரவில்லை. வழக்கமான பி.சி.ஆர் பரிசோதனைக்கும் அவர் சமூகமளிக்கவில்லை. இதனையடுத்து சக வீரர்கள் அறையில் சென்று பார்த்தபோது ஜூலியஸ் செகிடோலெகோவை காணவில்லை.
24 மணித்தியாலமும் ஹோட்டல் தீவிர கண்காணிப்பில் உள்ள நிலையில், ஜூலியஸ் செகிடோலெகோ எங்கு சென்றார் என இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜப்பான பொலிஸாருக்கு இது தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டதுடன், குறித்த வீரரை அந்நாட்டு பொலிஸார் தேடி வருவதாக ஒலிம்பிக் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, உகண்டாவில் வாழ்வது கடினமாக இருப்பதால், ஜப்பானில் தங்கி வேலை செய்ய விரும்புவதாக ஒரு கடிதம் அவர் எழுதி வைத்து விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகாமையில் புகையிரத நிலையம் ஒன்று இருக்கின்றது.
இதில் மத்திய ஜப்பானில் உள்ள நகோயாவுக்கு புல்லட் புகையிரதத்தில் பயணம் செய்வதற்கு குறித்த வீரர் டிக்கெட் வாங்கியதை பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.