July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கையின் முதல் குழு டோக்கியோ சென்றடைந்தது

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கையின் முதல் குழுவினர்  ஜப்பானை சென்றடைந்தனர்.

32 ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இம்முறை ஒலிம்பிக் விழா பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்பட உள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் அந்நாட்டில் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் போராட்டங்களை தவிர்க்கும் வகையில் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒலிம்பிக்கில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் அணிகள் ஜப்பான் சென்ற வண்ணம் உள்ளதுடன், ஒலிம்பிக் கிராமமும் கடந்த வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை தரப்பில் 9 வீரர், வீராங்கனைகள், 17 அதிகாரிகள் இம்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளனர்.

இதன்படி, இலங்கையின் முதல் குழுவினர் ஜப்பானை சென்றடைந்தனர்.

இந்தக் குழுவில் பெட்மிண்டன் வீரர் நிலூக கருணாரத்ன, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை டெஹானி எகொடவெல மற்றும் அவரது முகாமையாளர், இலங்கை அணியின் கொவிட் வைத்தியர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, ஒலிம்பிக்கில் பங்குபற்றவுள்ள பல இலங்கை வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் தற்போது வெளிநாடுகளில் இருப்பதால் அவர்கள் அங்கிருந்து நேரடியாக ஜப்பானை சென்றடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெட்மிண்டன் வீரர் நிலூக கருணாரத்னவின் உதவியாளர் தினுக கருணாரத்ன லண்டனில் இருந்தும், நீச்சல் வீராங்கனை அனிக்கா கபூர் பாங்கொக்கிலிருந்தும் 19 ஆம் திகதி டோக்கியோவை சென்றடையவுள்ளனர்.

இதே தினத்தன்று ஜூடோ வீரர் சாமர நுவன் தர்மவர்தன கொசோவா தீவுகளில் இருந்து ஜப்பானை சென்றடையவுள்ளார்.

இதனையடுத்து நீச்சல் வீரர் மெதிவ் அபேசிங்க அமெரிக்காவில் இருந்து 20 ஆம் திகதியும், யுபுன் அபேகோன் இத்தாலியிலிருந்து 23 ஆம் திகதியும், நிமாலி லியன ஆராச்சி இலங்கையிலிருந்து 23 ஆம் திகதியும் ஜப்பானை சென்றடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கெஹானி தற்போது ஜப்பானில் இருப்பதால் அவர் நேரடியாக ஒலிம்பிக் கிராமத்தை வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை ஒலிம்பிக்கில் முதல் இலங்கையராக தகுதி பெற்ற சுவீடனைச் சேர்ந்த இலங்கை வம்சாவளி குதிரைச் சவாரி வீராங்கனையான மெதில்டா கார்ல்சன், தனது ஐந்து பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடன் இம்மாதம் 25 ஆம் திகதி ஜப்பானை வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, ஜப்பான் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் ஆரம்ப விழா நிகழ்ச்சியில் இலங்கை சார்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ கலந்து கொள்ளவுள்ளதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி அவர் டோக்கியோவை சென்றடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.