July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒலிம்பிக் செல்லும் இலங்கை வீரர்களுக்கு அமைச்சர் நாமல் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ வாழ்த்துகளை தெரிவித்தார்.

32 ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதையொட்டி விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ,ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ZOOM தொழில்நுட்பம் வாயிலாக நேற்று (15) நடைபெற்றது.

இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் வீரர், வீராங்கனைகள் ஒவ்வொருவருடனும் உரையாடி அவர்கள் கடந்து வந்த பாதை மற்றும் சாதனைகளை நினைவுகூர்ந்து ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டினார்.

அதேபோல,ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொண்ட வீரர்களுக்கும்,அவர்களது பயிற்சியாளர்களுக்கும் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் சிறப்பம்சம் என்னவெனில், இம்முறை ஒலிம்பிக் செல்லும் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள 9 வீரர்களில் ஐவர் வீராங்கனைகளாவர். ஒரு நாடாக அதிகளவு பெண்களின் பங்குபற்றுதல் இம்முறை ஒலிம்பிக்கில் அதிகமாக இடம்பெற்றுள்ளது. ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் முதல் தடவையாக ஒலிம்பிக் வரத்தை மில்கா கெஹானி பெற்றுக் கொண்டுள்ளார்.

எனவே, வெற்றி பெறுவதை போல தனிப்பட்ட காலத்தை  பதிவு செய்ய நீங்கள் அனைவரும் முயற்சி செய்யவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமின்றி, விளையாட்டுத்துறை அமைச்சினால் உங்களுக்கான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றில் முதல் தடவையாக ஒலிம்பிக்கில் பங்குபற்றுகின்ற வீரர்களுக்கும், அவர்களது பயிற்சியாளர்களுக்கும் விசேட கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

எனவே, நீங்கள் இலங்கையர்களாக எமது நாட்டை, எமது தேசியக் கொடியை முன்னால் நிறுத்தி போட்டியிடப் போகின்றீர்கள். குறிப்பாக உங்களது ஒழுக்கம் தொடர்பில் முதலிடம் கொடுங்கள். ஒரு அணியாக விளையாடுகின்ற போது மற்றைய வீரர்களுக்கும் மதிப்பளியுங்கள். நீங்கள் பங்குபற்றுவது ஒலிம்பிக் விளையாட்டு விழா என்பதை மறந்துவிடாதீர்கள்.

அதனால் உங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி நாட்டுக்கு பெருமையை தேடித்தர வேண்டும் என வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.