June 15, 2025 9:53:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தினேஷ் சந்திமாலின் கடிதத்துக்கு இலங்கை கிரிக்கெட் சபை பதில்

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் தினேஷ் சந்திமால், தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கலந்துரையாட நேரம் கோரி சமர்ப்பித்த கடிதத்திற்கு இலங்கை கிரிக்கெட் சபை பதிலளித்துள்ளது.

இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கை கிரிக்கெட் சபைக்கு வருமாறு தினேஷ் சந்திமாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வாவுக்கு கடிதமொன்றை அனுப்பிய தினேஷ் சந்திமால், தமது கிரிக்கெட் வாழ்க்கையின் எதிர்காலம் தொடர்பில் கேள்வியெழுப்பியிருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அணியிலிருந்து ஒதுக்கப்படுவது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவே எனது செயல்திறனை பாதித்துள்ளது என்று சந்திமால் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டிய சந்திமால், இலங்கை கிரிக்கெட்டின் கடந்த கால சிரேஷ்ட வீரர்களின் வாழ்க்கையின் 2ஆவது பாதியில் தான் அதிக செயல்திறன் வெளிக்காட்டினர் என்பதைக் சுட்டிக்காட்டி, ஏன் 31 வயதாகும் என்னை அணியில் இருந்து புறக்கணிக்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனால் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கலந்துரையாட நேரம் வழங்குமாறு சந்திமால் கோரிக்கை விடுத்திருந்தார். 

இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து அண்மைக்காலமாக சிரேஷ்ட வீரர்களை நீக்கி வருகின்றமை மிகப் பெரிய பேசும்பொருளாக மாறியுள்ளது. இதன்காரணமாக குறித்த வீரர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தப் பின்னணியில்தான் தினேஷ் சந்திமால் இவ்வாறு கடிதம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் சபைக்கு அனுப்பியுள்ளார்.