July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காஷ்மீர் பிரீமியர் லீக்கில் விளையாட திலகரட்ன டில்ஷானுக்கு அழைப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அங்குரார்ப்பண காஷ்மீர் பிரீமியர் லீக் டி-20 தொடரில் விளையாட இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ன டில்ஷானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த தொடரில் பங்குபற்றுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 2009 இல் இலங்கை கிரிக்கெட் அணியை இலக்காக வைத்து பாகிஸ்தானின் லாகூரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை தன்னால் மறக்க முடியாது என தெரிவித்துள்ள டில்ஷான், குடும்பத்தாருடன் கலந்துரையாடி இந்த  தொடரில் பங்கேற்பது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை, குறித்த தொடரில் விளையாடுவதற்கு டில்ஷான் சம்மதம் தெரிவித்தால்,முசாபராபாத் டைகர்ஸ் அணியின் வெளிநாட்டு வீரராக அவர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, டில்ஷான் விளையாடவுள்ள முசாபராபாத் அணியில் பாகிஸ்தான் நட்சத்திரங்களான மொஹமட் ஹபீஸ், சொஹைல் தன்வீர், செஹைப் மக்சூத் உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, திலகரட்ன டில்ஷானுடன், தென்னாபிரிக்காவின் முன்னாள் நட்சத்திரம் ஹர்ஷல் கிப்ஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர், மெதிவ் பிரயர், ஓவைஸ் ஷா ஆகியோர் காஷ்மீர் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள காஷ்மீர் லீக் டி-20 தொடர் ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் திகதி வரை நடைபெறும்.

மொத்தம் ஆறு அணிகள் பங்குபற்றவுள்ள இந்தத் தொடரில் 6 அணிகளும் ஒருவருக்கொருவர் எதிராக விளையாட உள்ளனர். இதில் முதல் 4 இடங்களைப் பெற்றுக் கொள்ளும் அணிகள் பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெறும்.