May 31, 2025 20:39:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு யுபுன், நிலானி தகுதி

இலங்கையின் மெய்வல்லுனர் வீரர்களான யுபுன் அபேகோன் மற்றும் நிலானி ரத்னாயக்க ஆகிய இருவரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக ஒரு வருடத்தால் பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதனிடையே, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு இலங்கை சார்பாக இரண்டு மெய்வல்லுனர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேசிய ஒலிம்பிக் சங்கம் நேற்று (29) அறிவித்தது.

இதில் இத்தாலியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற 100 மீட்டர் ஓட்டப் போட்டியின் தேசிய மற்றும் தெற்காசிய சம்பியனுமான யுபுன் அபேகோன் இம்முறை ஒலிம்பிக்கில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளார்.

அண்மைக் காலமாக ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற முன்னணி மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிகளையும், சாதனைகளையும் முறியடித்துள்ள 26 வயதான யுபுன், 100 மீட்டர் ஓட்டத்துக்கான சர்வதேச தரவரிசையில் 49 ஆவது இடத்தில் உள்ளார்.

முன்னதாக, இத்தாலியில் கடந்த மே மாதம் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இவர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.15 செக்கன்களில் ஓடி முடித்து புதிய தேசிய மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பெண்களுக்கான 3,000 மீட்டர் தடை தாண்டி ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் பங்கீட்டு முறைக்கான பட்டியலில் முதல் 45 பேரில் கடைசி இடத்தில் இலங்கை வீராங்கனை நிலானி ரத்னாயக்க இடம்பெற்றுள்ளார்.

இதன் காரணமாக இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றும் வாய்ப்பை அவர் உறுதி செய்துள்ளார்.

இதில் இந்தியாவின் பாட்டியாலாவில் நடைபெற்ற 60 ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 3000 மீட்டர் தடை தாண்டி ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அவர், வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

அதேபோல, இறுதியாக கத்தாரின் தோஹாவில் 2019 இல் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியின் போது கடைசி தடையை  தாண்டும் போது தடுக்கி விழுந்ததால் வெண்கலப் பதக்கத்தை பெறும் வாய்ப்பை நிலானி ரத்னாயக்க தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இதுவரை ஏழு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

குதிரைச் சவாரி வீராங்கனை மெதில்டா கார்ல்சன், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கிஹானி, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை, டெஹானி எகொடவெல, பெட்மிண்டன் வீரர் நிலூக கருணாரத்ன மற்றும் ஜூடோ வீரர் சாமர நுவன் தர்மவர்தன ஆகியோரோ இவ்வாறு தகுதி பெற்றுக் கொண்டனர்.

இதனிடையே, நீச்சல் வீரர்களான மெத்யூ அபேசிங்க மற்றும் அனிக்கா கபூர் ஆகிய இருவரினதும் பெயர்களை ஒலிம்பிக் போட்டிக்கு பரிந்துரைக்க தேசிய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும், சர்வதேச நீர்நிலை விளையாட்டுத்துறை சம்மேளனம் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கு தகுதிபெற்ற வீரர்களுக்கான உலக தரவரிசையை நாளை வெளியிடவுள்ளது. இதன்பிறகு தான் இலங்கையின் நீச்சல் வீரர்களின் ஒலிம்பிக் பங்குபற்றல் உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.