
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் அணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்கள் மூவரையும் உடனடியாக நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு டர்ஹமில் உள்ள வீதிகளில் சுற்றித் திரிவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிரிக்கெட் வீரர்கள் உயிர்க்குமிழி (பயோ பபுள்) மற்றும் ஹோட்டல் ஊரடங்கு உத்தரவை மீறியுள்ளார்களா என்பதை அறிய இலங்கை கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பின்னர், வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த மூன்று வீரர்களும் நாளை (29) நாடு திரும்புவார்கள் எனவும், எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள இந்திய தொடருக்கான அணித் தேர்வில் இருந்து நீக்கப்படுவதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.