October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒலிம்பிக்கில் பங்குபற்றும் முதலாவது திருநங்கையாக நியூசிலாந்து வீராங்கனை லோரெல் ஹபார்ட் தெரிவு!

நியூசிலாந்தின் பளு தூக்கல் நட்சத்திரமும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவருமான லோரெல் ஹபார்ட் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள முதலாவது மூன்றாம் பாலினத்தை சேர்ந்த (திருநங்கை) வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

உடலில் டெஸ்டோஸ்டிரொனின் மட்டம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு குறைவாக இருக்கும் திருநங்கை போட்டியாளர்கள் பெண்களாக போட்டியிடும் வகையில் சர்வதேச ஒலிம்பிக் குழு 2015 இல் விதிகளை மாற்றியதன் பலனாக லோரெல் ஹபார்ட், முதலாவது திருநங்கையாக இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபெறுவதற்கு வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன்படி, இம்முறை ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 87 கிலோ கிராம் சுப்பர் – ஹெவிவெயிட் எடைப்பிரிவில் அவர் போட்டியிட உள்ளார்.

அதேபோல, 43 வயதான லோரெல் ஹபார்ட் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள அதிக வயதுடைய பளுதூக்கல் வீராங்கனையாவார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013 இல் திருநங்கையாக மாறுவதற்கு முன்னர் அவர் ஆண்களுக்கான போட்டிகளிலேயே பங்குபற்றி வந்தார்.

அதுமாத்திரமன்றி, திருநங்கையாக மாறிய பிறகு கடந்த 2017 இல் நடைபெற்ற உலக பளு தூக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 2019 சமோவாவில் நடைபெற்ற பசுபிக் விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்தையும் அவர் வென்றுள்ளார்.

அதேபோல, 2020 ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற பளு தூக்கல் உலகக் கிண்ணத்தில் 87 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.

அத்துடன், 2018 அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவிலும் இவர் பங்கேற்றிருக்க வேண்டியது. ஆனால், காயம் ஏற்பட்டதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

இப்படி பல சர்வதேச  போட்டிகளில் கலந்து கொண்டிருந்தாலும், ஒலிம்பிக் என்பது அவருக்கு எட்டாக் கனவாகவே இருந்தது. ஆனால், தற்போது அது நிறைவேறப் போகிறது.

இதேவேளை, இது ஒலிம்பிக்கில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும். இது நியூசிலாந்து நாட்டுக்கு பெருமையாகும் என நியூசிலாந்து ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேபோல, அநேகமான நியூசிலாந்தினர் என் மீது காட்டும் பரிவுக்கும் வழங்கும் ஆதரவுக்கும் நான் பணிவடக்கத்துடன் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என நியூஸிலாந்து ஒலிம்பிக் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் லோரெல் ஹபார்ட் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாயினும், லோரெல் ஹபார்ட்டை ஒலிம்பிக்கில் பங்குபற்ற செய்வது தொடர்பான தீர்மானத்திற்கு பல தரப்புகளில் இருந்து கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

அது மாத்திரமின்றி, நியூசிலாந்து பளு தூக்கல் வீராங்கனைகள் மத்தியில் இது சில எதிர்வினைகளையும் ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.