July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுனில் கவாஸ்கரிடமிருந்து ஐ.சி.சியின் ‘Hall Of Fame’ விருதை பெற்றுக் கொண்ட குமார் சங்கக்கார

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘ஹோல் ஒப் பேம்’ விருதை குமார் சங்கக்கார பெற்றுக் கொண்டார்.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கரின் கரங்களினால் இந்த விருது சங்கக்காரவுக்கு வழங்கி வைக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களை கௌரவப்படுத்தும் விதமாக 2009  முதல் ஆண்டு தோறும் ஹோல் ஒப் பேம் விருதுகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி)  வழங்கி வருகிறது.

இதனிடையே, ஐ.சி.சியின் முதலாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சௌத்தாம்டன் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இதனை முன்னிட்டு இந்தாண்டுக்கான ஹோல் ஒப் பேம் விருதை 10 வீரர்களுக்கு வழங்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்திருந்தது.

இதில் 1996-2016 காலப்பகுதிக்கான ஹோல் ஒப் பேம் விருதுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார மற்றும் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் அண்டி பிளெவர் ஆகிய இருவரதும் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இரண்டாவது நாளான இன்றைய தினம் (20) ஐ.சி.சியின் ஹோல் ஒப் பேம் விருது குமார் சங்கக்காரவிடம் உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், குறித்த விருதை ஏற்கனவே பெற்றுக் கொண்ட இந்திய அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கரின் கரங்களினால் சங்கக்கார இந்த விருதை பெற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பின்னர், இந்த கௌரவத்தை பெறும் இரண்டாவது இலங்கை வீரராக சங்கக்கார வரலாற்றில் இடம்பிடித்தார்.

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கிரிக்கெட் வர்ணனையாளர்களில் ஒருவராக குமார் சங்கக்கார செயல்பட்டு வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.