June 13, 2025 7:48:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குசல் பெரேராவின் அதிரடி சதம், துஷ்மந்த சமீரவின் 5 விக்கெட் கைகொடுக்க இலங்கை அணி ஆறுதல் வெற்றி

அணித் தலைவர் குசல் பெரேராவின் அதிரடி சதம், வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவின் அபார பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியால் பங்களாதேஷ் அணியுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 97 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியது.

எனினும், பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை 2-1 என கைப்பற்றியது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டாக்காவில் நடைபெற்றது.

ஐ.சி.சி. இன் ஒரு நாள் சுப்பர் லீக்கினுள் அடங்கும் இந்த ஒருநாள் தொடரின் முதல்  இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று பங்களாதேஷ் அணி தொடரினை 2-0 என ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், தொடரின் இறுதிப் போட்டியில் வைட்வொஷ் தோல்வியினை தவிர்க்க இலங்கை அணி கட்டாய வெற்றி ஒன்றினை எதிர்பார்த்து களமிறங்கியது.

இதன்படி, டாக்காவில் இன்று நடைபெற்ற 3 ஆவது போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் குசல் பெரேரா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த அணி தலைவர் குசல் பெரேரா மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

82 ஓட்டங்கள் வரை நீடித்த முதல் விக்கெட் இணைப்பாட்டம் தனுஷ்க குணதிலக்க 39 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போது நிறைவுக்கு வந்தது

அதன் பின்னர் வந்த பெதும் நிஸ்ஸங்க டக்அவுட் ஆகி வெளியேற, குசல் மெண்டிஸ் 22 ஓட்டங்களை எடுத்து மீண்டும் ஏமாற்றம் கொடுத்தார்.

எனினும், பொறுப்பாக விளையாடிய அணி தலைவர் குசல் பெரேரா மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோரின் துடுப்பாட்டத்தோடு இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதில் பங்களாதேஷ் அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் சதமடித்த முதலாவது இலங்கை அணித்தலைவராக இடம்பிடித்த குசல் பெரேரா, 122 பந்துகளில் 120 ஓட்டங்களை எடுத்ததுடன், தன்னுடைய 6 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

மறுமுனையில், தனன்ஞய டி சில்வா, 6ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 55 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சு சார்பில் தஸ்கின் அஹமட் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், சொரிபுல் இஸ்லாம் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 287 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி இலங்கை வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் வெறும் 42.3 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து போட்டியில் படுதோல்வியடைந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் மஹமதுல்லாஹ் ரியாத் (53) மற்றும் மொசாடிக் ஹொசைன் (51) ஆகிய இருவரும் அரைச்சதம் அடித்து வலுச்சேர்த்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் பங்களாதேஷ் அணிக்கு நெருக்கடி கொடுத்த துஷ்மந்த சமீர வெறும் 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சு பிரதியினை பதிவு செய்தார்.

மறுபுறத்தில் வனிந்து ஹஸரங்க மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்தனர்.

இதன்படி, 97 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி, 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் ஆறுதல் வெற்றியையும் பதிவு செய்தது.

அத்துடன், இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கில் தமது முதல் வெற்றியுடன், முதல் புள்ளியினையும் இலங்கை அணி பெற்று கொண்டது.

எது எவ்வாறாயினும், பங்களாதேஷ் அணி வரலாற்றில் முதல் முறையாக இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரை 2 -1 என்று கைப்பற்றியமை கவனிக்கத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் துஷ்மந்த சமீர தெரிவு செய்யப்பட, தொடர் நாயகன் விருது பங்களாதேஷ் அணியின் முஷ்பிகுர் ரஹீமிற்கு வழங்கப்பட்டது.