July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் ஜூலை 30ஆம் திகதி ஆரம்பம்!

லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடரின் இரண்டாவது சீசன் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நாங்கள் இந்த ஆண்டில் லங்கா பிரீமியர் லீக் தொடரினை நடத்துவதற்குரிய பொருத்தமான கால அட்டவணையை தெரிவு செய்திருக்கின்றோம். அதேநேரம், நாங்கள் தொடர் பற்றிய இறுதி விடயங்களை தீர்மானிப்பது தொடர்பிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றோம் என இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமைத்துவ குழுவின் தலைவராக உள்ள பேராசியர் அர்ஜூன டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டில் முதல் முறையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த லங்கா பிரீமியர் லீக் தொடர் ஹம்பாந்தோட்டை நகரில் நடைபெற்றிருந்ததோடு, தொடரில் இலங்கையின் மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஐந்து அணிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இம்முறை போட்டிகளில் ஆறாவது அணியாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு அணியையும் இணைத்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதேநேரம் கடந்த ஆண்டு கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உயிர் பாதுகாப்பு வலயத்தினுள் நடைபெற்றிருந்த லங்கா பிரீமியர் லீக் தொடரினை இம்முறையும் அதே நிலைமைகளில் நடத்துவதற்குரிய பேச்சுவார்த்தைகளினையும் இலங்கை கிரிக்கெட் சபை, சுகாதார அமைச்சுடன் மேற்கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.