May 28, 2025 10:51:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன மாலைதீவில் தனிமைப்படுத்தப்பட்டார்!

Photo: MI Twitter

ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்ற மஹேல ஜயவர்தன, மாலைதீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து ஐ.பி.எல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டியில் விளையாட வந்த வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு ஒவ்வொரு அணி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்தது.

இதில் கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவுக்கான பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மட்டும் தனது வெளிநாட்டு வீரர்களை தனி விமானம் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி, ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்ற நியூசிலாந்து அணி வீரர்கள் ஐ.சி.சி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவிலிருந்து நேராக இங்கிலாந்துக்கு செல்கிறார்கள்.

அத்துடன், ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்ற 11 இங்கிலாந்து வீரர்களில் 8 பேர் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார்கள்.

இந்த நிலையில், தென்னாபிரிக்காவை சேர்ந்த 11 வீரர்களும்,மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர்களும் ஒரே விமானத்தில் சொந்த நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

அத்துடன், ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்றிருந்த பங்களாதேஷ் அணி வீரர்களான சகிப் அல் ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தனி விமானம் மூலமாக தங்கள் நாட்டுக்கு சென்றடைந்தனர்.

இது இவ்வாறிருக்க, இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா செல்வோருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தற்காலிக தடைவிதித்தது.

இதனையடுத்து ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற அவுஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் நேரடியாக அவுஸ்திரேலியா செல்வதற்கு தடையேற்பட்டது.

இதன்காரணமாக அவர்கள் மாலைதீவு சென்று அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ததன் பின்னர் அங்கிருந்து வேறு விமானத்தின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு பயணிப்பதற்கு இந்திய கிரிக்கட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக நேற்று காலை இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 வீரர்கள் உட்பட மொத்தம் 40 பேர் மாலைதீவுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதேவேளை, இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு இலங்கை அரசாங்கமும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

எவ்வாறாயினும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன மும்பை அணிக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் மாலைதீவுக்கு புறப்பட்டு சென்றதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாலைதீவுக்கு சென்றுள்ள மஹேல ஜயவர்தன, 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனிடையே, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இயக்குனராக செயற்பட்ட குமார் சங்கக்கார மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட்ட முத்தையா முரளிதரன் ஆகிய வீரர்களும் மாலைதீவுக்கு  சென்று சுய தனிமைப்படுத்தலில் இருந்த பிறகு நாடு திரும்புவார்கள் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.