October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மைக்கல் ஹஸிக்கு கொரோனா!

Photo: BCCI

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருமான மைக்கல் ஹஸி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனை மைக்கல் ஹஸியின் முகாமையாளர் நெய்ல் மெக்ஸ்வெல் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி மும்பையில் ஒரே ஹோட்டலில்தான் சென்னை அணியினரும், கொல்கத்தா அணியினரும் தங்கி இருந்தனர். இதில் கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் சென்னை அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளர் லக்ஷ்மிபதி பாலாஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அனைத்து வீரர்களும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக்கல்  ஹஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பிடிஐ வெளியிட்ட செய்தியில், மைக்கல் ஹஸிக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து மீண்டும் இரண்டாவது தடவையாக பரிசோதனைக்கு அனுப்பியதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஐ.பி.எல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் உள்ளிட்ட குழாமினர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ  குழாமினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதையடுத்து, 2021 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் டி20 தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.