February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக 200 போட்டிகள்: “எனக்கு வயதாகிவிட்டதாக உணர்கிறேன்”; டோனி

Photo: BCCI

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக 200 போட்டிகளில் விளையாடியது, தனக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்த்துவதாக எம்.எஸ் டோனி கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டு ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி, தான் வயதானவனாக உணர்வதாக கூறியுள்ளது அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்காக துடுப்பாட்ட வீரராகவும், விக்கெட் காப்பாளராகவும், தலைவராகவும் பல சாதனைகளை படைத்து விட்டு ஓய்வு முடிவை அறிவித்தவர் டோனி. இந்திய அணிக்காக அவர் விளையாடுவதை காண முடியாதவர்களுக்கு ஐ.பி.எல் போட்டிகள் ஆறுதல் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

டோனி தற்போது 40ஆவது வயதை நெருங்கிக் கொண்டுள்ளார். இருப்பினும், கிரிக்கெட் களத்திற்கு வந்துவிட்டால் வயது வெறும் ஒரு இலக்கம் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது ஆட்டம் அதிரடியாய் இருக்கும் .

இவ்வாறான சூழலில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில்  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 8 ஆவது லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி விளையாடிய 200 ஆவது போட்டி இதுவாகும். அதாவது ஐ.பி.எல் இல் 176 போட்டிகள், சம்பியன்ஸ் லீக்கில் 24 போட்டிகள் என்று மொத்தம் 200 போட்டிகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.

உள்ளூர் தொடர்களில் ஒரே அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார்.

எம்.எஸ். டோனி ஐ.பி.எல் இல் இதுவரை 235 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 2 ஆண்டுகள் ( 2016, 2017) சென்னை அணி தடை செய்யப்பட்டிருந்த போது புனே அணிக்காக 30 போட்டிகளில் விளையாடியதும் அடங்கும்.

இதனிடையே, போட்டியின் பிறகு 200 போட்டிகள் மைல்கல் குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்று 39 வயதான டோனியிடம் கேட்ட போது, எனக்கு மிகவும் வயதாகி விட்டதாக உணர்கிறேன் என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.

இது ஒரு நீண்ட பயணம். வித்தியாசமான சூழல், பல்வேறு நாடுகள் என்று மிகவும் சுவாரஸ்யமான ஒரு பயணம். கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து எனது ஐ.பி.எல். பயணம் தொடங்கியது. அதன் பிறகு தென்னாபிரிக்கா, துபாயில் எல்லாம் விளையாடி விட்டு மீண்டும் தற்போது சொந்த நாட்டில் விளையாடுகிறேன். ஆனால் எங்களுக்கு மும்பை, சொந்த ஊர் மைதானமாக அமையும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை.

சென்னை சேப்பாக்கத்தை எடுத்துக் கொண்டால் 2011ஆம் ஆண்டு வரை எங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆடுகளமாக அது இருந்தது. அப்போது சுழலுக்கு ஒத்துழைக்கும். வேகப்பந்து வீச்சுக்கும் உதவிகரமாக இருக்கும். ஆனால் ஆடுகளத்தை மறுசீரமைப்பு செய்த பிறகு அதன் தன்மை மாறிவிட்டது. அதன்பிறகு அங்குள்ள சூழலுக்கு தக்கபடி மாற்றிக்கொள்வது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது.

அதேசமயம் தற்போதைய மும்பை வான்கடே ஆடுகளத்தை எடுத்துக் கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் எல்லாமே போட்டிக்குரிய தினத்தில் சீதோஷண நிலையைப் பொறுத்தது. இன்றைய போட்டியின் போது ஆடுகளத்தில் பந்தின் நகர்வு தன்மை நன்றாக இருந்தது. ஆனால் அதிக அளவில் ‘ஸ்விங்’ ஆகவில்லை. பனிப்பொழிவு இல்லாததால் பந்துவீச்சு எடுபட்டது’ என்றார்.

சென்னை அணிக்காக 200 ஆட்டங்களில் ஆடியுள்ள முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள டோனிக்கு அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளமிங் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் கூறுகையில்,

டோனியின் நீண்ட பயணத்தைப் பாராட்டியாக வேண்டும். 200 போட்டிகளில் விளையாடியுள்ள போதிலும், இன்னும் போட்டியிலும், அணிக்காகவும் தனது சிறப்பான பங்களிப்பை அளிப்பதில் ஆர்வமுடன் உள்ளார். சென்னை அணி வளர்ந்து நிற்கிறது. அத்தோடு சேர்ந்து டோனியும் வளர்ந்துள்ளார். அவருக்கும் அணிக்கும் இடையிலான உறவு அருமையானது. கன கச்சிதமானது. சென்னை சுப்பர் கிங்ஸின் இதயத்துடிப்பாக டோனி இருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்தார்.