July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வரும் பங்களாதேஷ் அணிக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

Photo: Bangladesh Cricket Twitter

ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கீழ் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இன்று (திங்கட்கிழமை) இலங்கை வரவுள்ளது.

சுமார் 40 உறுப்பினர்களைக் கொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் குழாமினர் சிறப்பு விமானத்தின் மூலம் இன்று  கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவார்கள்.

இதனையடுத்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் காலத்தில் பங்களாதேஷ் அணியினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை இராணுவத்திடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, மூன்று நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்த பிறகு, நீர்கொழும்பில் உள்ள சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் எதிர்வரும் 17ஆம், 18ஆம் திகதிகளில் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷ் அணி விளையாடவுள்ளது.

அதன்பிறகு, ஏப்ரல் 21 ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டியும், ஏப்ரல் 29 ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.