July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“லண்டனில் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டும்”: மேயர் சாதிக் கான் வேண்டுகோள்

ஐபிஎல் போட்டியை லண்டனில் நடத்த வேண்டும் என லண்டன் மேயர் சாதிக் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விராத் கோலி, ரோஹித் சர்மா, எம். எஸ். டோனி ஆகிய வீரர்கள் லண்டனில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதைப் பார்க்க விரும்புவதாக மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடைபெற்று வருகிறது.

சென்னை, மும்பை, கொல்கத்தா, அஹமதாபாத், டெல்லி, பெங்களுரூ ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. அத்துடன், கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

ஐபிஎல் 2021 போட்டி நேற்று முதல் சென்னையில் தொடங்கியது. முதல் லீக் போட்டியில் மும்பையை ரோயல் சேலஞ்சர்ஸ் அணி வீழ்த்தியது.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டியை லண்டனில் நடத்த வேண்டும் என தான் விரும்புவதாக  லண்டன் மேயர் சாதிக் கான் நேர்காணலொன்றில் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியை லண்டனில் நடத்த ஆர்வமாக உள்ளேன். இதன்மூலம் உலகின் விளையாட்டுத் தலைநகரமாக இந்த நகரம் விளங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் நிர்வாகத்திடமும் ஐபிஎல் அணிகளிடமும் இதுகுறித்துப் பேசி வருவதாகவும்,  இங்கிலாந்து கிரிக்கெட் சபை மற்றும் மற்றவர்களிடமும் பேசி இந்தக் கனவை நிறைவேற்ற விரும்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் லண்டனுக்கு மட்டுமல்ல, இங்கிலாந்தின் ஏனைய கிரிக்கெட் மைதானங்களுக்கும் பயனுள்ளதாக அமையும். ஐபிஎல் போட்டியை லண்டனில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். இந்தியாவுக்கு லண்டனையும், லண்டனுக்கு இந்தியாவையும் மிகவும் பிடிக்கும். இதனால் இருதரப்புக்கும் பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில். மிட்ல்செக்ஸ் அணியுடன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஏசியன் கிண்ணப் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 2009 இல் விளையாடியிருந்தது. இதன்படி ராஜஸ்தான் றோயல்ஸ் மாத்திரமே லண்டனில் விளையாடிய ஒரேயொரு ஐபிஎல் அணியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.