
photo: Sri Lanka Cricket facebook
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று தடுப்பூசி செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட அஸ்ரா செனகா தடுப்பூசியே இலங்கை வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் முதலாவது டோஸ் கொழும்பில் வழங்கப்பட உள்ளதாவும், இரண்டாவது டோஸ் இன்னும் இரண்டு மாதங்களில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் விளையாடி வரும் தேசிய அணி வீரர்கள் மட்டுமன்றி, பயிற்றுவிப்புக் குழுவின் உறுப்பினர்களுக்கும் அஸ்ரா செனகா தடுப்பூசி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட உள்ளது.
இதேவேளை, இலங்கை தேசிய அணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகளுக்கான கிரிக்கட் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ள நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..