July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சொந்த மண்ணில் இந்தியாவுக்கு தோல்வி: இங்கிலாந்து அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அஹமதாபாத், நரேந்த்ர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற  இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்ரேயாஸ் ஐயர் 67 ஓட்டங்களையும், ரிஷாப் பன்ட் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து பந்து வீச்சில் ஜொப்ரா ஆச்சர் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 125 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 15.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஜேசன் ரோய், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் 8 ஓவர்களில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

இதில் ஜேசன் ரோய் 32 பந்துகளில் 4 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 49 ஓட்டங்களையும், ஜொஸ் பட்லர் 24 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து வந்த ஜொனி பெயார்ஸ்டோவ் 17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும், டேவிட் மலான் 20 பந்துகளில் ஆடடமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்று இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இங்கிலாந்து அணி 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ஜொப்ரா ஆச்சர் தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது டி-20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.