July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கிந்தியத் தீவுகள் தொடரிலிருந்து நாடு திரும்பும் அஞ்சலோ மெத்யூஸ்

Sri Lanka Cricket Facebook

மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வருகின்ற சிரேஷ்ட வீரரும், சகலதுறை ஆட்டக்காரருமான அஞ்சலோ மெத்யூஸ் உடனடியாக நாடு திரும்புவதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்புவதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தாலும், அவரது இரண்டு வயது மகளுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே அவர் நாடு திரும்புவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் பதில் தலைவராக அஞ்சலோ மெத்யூஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன், குறித்த தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும், அஞ்சலோ மெத்யூஸின் மகளின் உடல் நலம் பெற வேண்டும் என்ற பிரார்தனைகள் சமூகவலைத்தளங்கள் வாயிலாக இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. இதில் அஞ்சலோ மெத்யூஸிற்குப் பதிலாக ஓசத பெர்னாண்டோ இலங்கை அணியில் களமிறங்குவார் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.