
(Photo : Facebook /Sachithra Senanayake)
ஆட்டநிர்ணய சதி தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் முன்பிணை விண்ணப்பத்தை கொழும்பு மேலதிக நீதவான் இன்று நிராகரித்தார்.
2020 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போது கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை வைக்கிங் ஆகிய அணிகளின் வீரர்கள் இருவரை, ஆட்ட நிர்ணயத்துக்கு சசித்ர சேனாநாயக்க, தூண்டியதாக சர்வதேச கிரிக்கெட் பேரரவையிடம் குறித்த வீரர்கள் முறையிட்டிருந்தனர்.
துபாயில் இருந்து குறித்த வீரர்களை இவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை, குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும்படி இலங்கையின் விளையாட்டு குற்றங்கள் குறித்த சிறப்பு பொலிஸ் விசாரணை பிரிவுக்கு அழைப்பு விடுத்தது.
இதற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு சசித்ர சேனாநாயக்க, ஒத்துழைக்கத் தவறியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து சசித்ர சேனாநாயக்கவிற்கு நீதிமன்றம் இன்று ஆஜராகுமாறு அழைப்பானை அனுப்பியுள்ளது.