July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவின் சுழல்பந்து வீச்சை இங்கிலாந்து சிறப்பாக எதிர்கொள்ளும்’

இந்திய வீரர்களின் சுழல்பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்களால் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என அவ்வணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜொப்ரா ஆச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 சர்வதேச இருபது 20 மற்றும் 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டி தொடர் குறித்து கருத்து வெளியிடும் போதே ஜொப்ரா ஆச்சர் மேற்கண்டவாறு கூறினார். இந்திய ஆடுகளங்கள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் அதனை தமது வீரர்களால் சவாலாக எதிர்கொள்ள முடியும்.

இலங்கையில் சுழல்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டே டெஸ்ட் தொடரை கைப்பற்றினோம். இலங்கை ஆடுகளங்களைப் போன்றதே இந்திய ஆடுகளங்களும். எனவே, இங்கும் அவ்வாறே விளையாடுவோம் எனவும் ஜொப்ரா ஆச்சர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியிலும் சிறந்த சுழல்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் எனவும், இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் தமக்கு கைகொடுக்கும் என்றும், வேகப்பந்து வீச்சில் பிரகாசிக்க முடியும் என நம்புவதாகவும் ஜொப்ரா ஆச்சர் குறிப்பிட்டுள்ளார்.