July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உரிமையாளர்களைக்கொண்ட கிரிக்கெட்டிலிருந்து லசித் மாலிங்க விலகல்

இலங்கையின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, உரிமையாளர்களைக் கொண்ட அணிகளிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

ஐ.பி.எல் இருபது 20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய லசித் மலிங்கவுக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்ற தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீரர்களில் ஏலம் நடைபெறவுள்ளதுடன், மும்பை இந்தியன்ஸ் அணி லசித் மலிங்கவை விடுவித்துள்ளது. அதன்படி அடுத்த தொடரில் அவர் எங்கு வேண்டுமானாலும் விளையாட முடியும்.

எனினும், உரிமையாளர்களைக் கொண்ட கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக லசித் மலிங்க அறிவித்துள்ளார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

12 பருவகால ஐ.பி.எல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள லசித் மலிங்க 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகத் திகழ்கிறார். 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமை மலிங்கவின் சிறந்த பந்துவீச்சாக பதிவாகியுள்ளது.