July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வெற்றிகொண்டு சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டியை வென்றதுடன் மூன்றாவது போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது.

தொடரை தீர்மானிக்கும் நான்காவது போட்டியும் வெற்றி தோல்வியின்றி முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஐந்தாம் நாள் தேநீர் இடைவேளை வரை அந்த நிலையே காணப்பட்டது.

ஆனாலும், அதன் பின்பு அதிரடி காட்டிய ரிஸப் பந்த் இந்திய அணிக்கு 7 விக்கெட்டுகளால் அபார வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். இது டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் கடைசி தருணத்தில் அதிரடியாக விளையாடிய அவர் போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக்கினார்.

இந்த வெற்றியானது அவுஸ்திரேலிய மண்ணில் இந்தியா தொடர்ச்சியாகப் பெற்ற இரண்டாவது டெஸ்ட் தொடர் வெற்றியாகும். ஏற்கனவே 2018 ஆம் ஆண்டில் விராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதும் நினைவுகூரத்தக்கது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணிக்கு மனமார்ந்த பாராட்டை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் இந்தியாவின் ஆற்றல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணி வீரர்களின் அயராத உழைப்பும், பேரார்வமும் தொடர் முழுவதும் இருந்தது. வெற்றி மாத்திரமே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.

எதிர்காலத்திலும் இவ்வாறு வெற்றிபெற வாழ்த்துக்கள் என நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் இந்திய அணியை பாராட்டியுள்ளார்.