October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அறிமுகப் போட்டியைப் போல உள்ளது; அஸ்வின்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அறிமுகப் போட்டியில் களமிறங்கியது போன்று உணர்வதாக இந்திய நட்சத்திர சுழல்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகலிரவு ஆடடமாக அடிலெய்டில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவே தடுமாற்றத்தை எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 244 ஓட்டங்களைப் பெற்றதுடன், பதிலளித்தாடிய அவுஸ்திரேலியா 191 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அவுஸ்திரேலிய அணியை திக்குமுக்காட வைத்து பந்துவீசிய அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் பின்னர் கருத்து வெளியிட்ட அஸ்வின், கொரோனா முடக்கத்துக்குப் பின்னர் தாம் களமிறங்கிய இந்தப் போட்டியை தனது அறிமுக டெஸ்ட் போட்டியைப் போல் உணர்வதாகக் குறிப்பிட்டார். கடந்த 10 மாதங்களாக கிரிக்கெட் விளையாட கிடைக்காதா என காத்திருந்ததாகவும் கொரோனா முடக்கத்தால் விளையாட முடியாதிருந்த போதிலும் கடும் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.