October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சம புள்ளிகளுடன் ஜப்னா ஸ்டாலியன்ஸ், தம்புள்ளை வைகிங் அணிகள் முதலிடத்தில்

எல்.பி.எல் இருபது 20 கிரிக்கெட் தொடரின் புள்ளிகள் பட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் அணிகள் தலா 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக தடைப்பட்டு கைவிடப்பட்டதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

இரண்டு அணிகளுமே 6 போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றிகள், ஒரு தோல்வியை சந்தித்துள்ளன. இவர்களுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளதுடன், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி எதிர்வரும் 9ஆம் திகதி கண்டி டஸ்கர்ஸ் அணியையும், 10ஆம் திகதி கொழும்பு கிங்ஸ் அணியையும் சந்திக்கவுள்ளது.

தம்புள்ள வைகிங் அணி எதிர்வரும் 9 ஆம் திகதி காலி கிளடியேடர்ஸ் அணியுடனும், 11ஆம் திகதி கொழும்பு கிங்ஸ் அணியுடனும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. எவ்வாறாயினும் ஜப்னா ஸ்டாலியன்ஸ், தம்புள்ள வைகிங், கொழும்பு கிங்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதியை உறுதிசெய்து விட்டன.

இதனால் அரையிறுதிக்கு தகுதிபெறும் நான்காவது அணிக்கான கடும் போட்டியில் காலி கிளடியேடர்ஸ் மற்றும் கண்டி டஸ்கஸ் அணிகள் ஈடுபட்டுள்ளன. இவ்விரண்டு அணிகளும் எதிர்வரும் 10 ஆம் திகதி மோதவுள்ளதுடன் அந்த போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு பெரும்பாலும் அரையிறுதிக்கான வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.