October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எல்பிஎல் தொடர்: சங்கா – மஹேலவின் ஆதரவால் யாழ்ப்பாண அணி ரசிகர்கள் உற்சாகம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்காரவும், மஹேல ஜயவர்தனவும் எல்பிஎல் போட்டிகளில் பங்கேற்கும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

டுவிட்டரில் வெளியாகியுள்ள அவர்களின் கருத்துக்களை யாழ்ப்பாண அணி (ஜப்னா ஸ்டாலியன்ஸ்) ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

எல்பிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடர் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இன்று 26 ஆம் திகதி அங்குரார்ப்பண வைபவத்துடன் ஆரம்பமாகின்றது.

இந்தத் தொடரில் போட்டியிடும் 5 அணிகளில் ஒன்றான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தமது சீருடையை வெளியிட்டது.

இதனையடுத்து ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை ஆதரிக்கும் விதமான கருத்துகளை முன்னாள் அணித்தலைவரான குமார் சங்கக்கார டுவிட்டரில் பதிவிட்டார்.

எல்பிஎல் தொடர் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு சிறப்பாக அமைய வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

இத்தொடரில் சகல அணிகளும் சவாலாக திறமையை வெளிப்படுத்த வேண்டும் எனவும், விளையாட்டு உணர்வுடன் சகலரும் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்றும் குமார் சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் ஆலோசகராக குமார் சங்கக்காரவுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

இதேவேளை, “குமார் சங்கக்காரவின் கருத்தை வழிமொழிந்து, எல்பிஎல் கிரிக்கெட் தொடரில் பிரவேசிக்கும் புதிய கிரிக்கெட் நகர அணியான ஜப்னா ஸ்டாலியன்ஸுக்கு ஆதரவை வழங்குகிறேன்” என மஹேல ஜயவர்தனவும் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.