April 23, 2025 10:14:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் திருவிழா: 108 பானைகளில் கோலாகலமாக பொங்கல்

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரரின் வருடாந்த திருவிழா கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகி பத்தாம் நாளான இன்று பொங்கல் விழா இடம்பெற்றது.

ஆலய வளாகத்தில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி சிறப்பு பூஜை நிகழ்வுகளுடன் கோலாகலமாக பொங்கல்விழா நடைபெற்றது.

காலை 11 மணிக்கு ஆரம்பமான பூஜை நிகழ்வுகளில் வவுனியா, யாழ்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் அரசியல் பிரமுகர்களும் வழிபாட்டில் பங்கெடுத்திருந்தனர்.

பொலிஸாரின் கெடுபிடிகள்

இதேவேளை ஆலய வளாகத்தில் அதிகளவான பொலிசாரும் புலனாய்வு பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஆலயத்திற்கு வருகைதரும் பக்கதர்கள் பதிவுசெய்யப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.ஆலயத்திற்குள் உட்செல்வதற்கான சந்தியில் ஒலுமடு பிரதான வீதியை அண்டி ராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை ஆலயத்தில் திலீபனை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி நிகழ்வுகள் எதனையும் மேற்கொள்ளவேண்டாம் என்று வவுனியா நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவின் பிரதியை நெடுங்கேணி பொலிசார் ஆலய நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.