July 13, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் வெற்றி இலகுவாகக் கிடைக்காது – புஜாரா

(Photo: Cheteshwar Pujara/ Facebook)

அவுஸ்திரேலிய மண்ணில் சவாலின்றி இலகுவாக வெற்றி கிடைக்காது. அதற்காக அணியின் சகல வீரர்களும் கடுமையாக முயற்சிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான செட்டிஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் பற்றி கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடரை வெற்றிகொள்ளும் எதிர்பார்ப்புடன் அணி வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக புஜாரா கூறுகிறார்.

தனி நபரின் திறமையால் மாத்திரம் வெற்றிபெற்றுவிட முடியாது எனவும், அதற்கான அணியின் சகல வீரர்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணி கடந்த முறையை விட வலுவாக இருப்பதால் தொடரில் கடும் சவால் நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியமானதாகும்.

இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் இல்லை. திட்டங்களை சரியாக வகுத்து செயல்படுத்தினால் நிச்சயமாக வெற்றி பெற முடியும். அதற்காக சிறப்பாகத் தயாராகி வருவதாகவும் புஜாரா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 71 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய மண்ணில் 2018 ஆம் ஆண்டு பருவ காலத்தில் டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.