![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/10/sam-e1633181655219.jpg?fit=642%2C380&ssl=1)
File Photo
நடிகை சமந்தா மற்றும் அவரது கணவரான நடிகர் நாகசைதன்யா ஆகியோர் தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரும் நாகர்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே நாகசைதன்யா – சமந்தா இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.
ஆனால் அவர்கள் இது தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
தற்போது சமந்தாவும் நானும் பிரிந்துவிட்டோம் என்று நாகசைதன்யா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
”நீண்ட யோசனைக்குப் பின்னர், நானும் சமந்தாவும் கணவன், மனைவியாக தொடரப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்களுக்குள் நட்பு இருந்தது. அதை நாங்கள் பெரும் பொக்கிஷமாகக் கருதுகிறோம். அந்த நட்புதான் எங்கள் உறவுக்கு அடிப்படை. இனியும் கூட, எங்களுக்குள் அந்த நட்பின் நிமித்தமான பிரத்யேக பிணைப்பு தொடரும்” என அவர் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் நாக சைதன்யா – சமந்தா ஜோடி என்பது மிகவும் பிரபலம். தற்போது இந்த ஜோடி பிரிந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
— chaitanya akkineni (@chay_akkineni) October 2, 2021