October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தவானின் சதம் வீண்போனது; டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கெபிடெல்ஸ் அணியை கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

டுபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடெல்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. பிருத்திவ் ஷா, அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பாண்ட், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

என்றாலும், தனி ஒருவராகப் பிரகாசித்த ஷிகர் தவான் சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். 61 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்ஸர்கள், 12 பௌண்டரிகளுடன் 106 ஓட்டங்களைக் குவித்தார். இது இந்தமுறை தொடரில் தவான் தொடர்ச்சியாகப் பெற்ற இரண்டாவது சதமாகும்.

டெல்லி கெபிடெல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மொஹமட் சமி 2 விக்கெட்டுகளையும், கிளென் மெக்ஸ்வெல், ஜேம்ஸ் நீசாம், எம். அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

164 ஓட்டங்களை நோக்கிக் களமிறங்கிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 17 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தலைவர் லோகேஷ் ராகுல் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஆனாலும், அதிரடி நாயகன் கிறிஸ் கெய்ல் 2 சிக்ஸர்களுடன் 29 ஓட்டங்களையும், நிகோலஸ் பூரான் 3 சிக்ஸர்களுடன் 53 ஓட்டங்களையும், கிளென் மெக்ஸ்வெல் 32 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

ஹுடாவும், ஜேம்ஸ் நீசாமும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. கெகிஸோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், அக்ஸார் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றி பஞ்சாப் அணி பெற்ற நான்காவது வெற்றியாகும். இதன் மூலம் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 08 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியது. டெல்லி கெபிடெல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.