July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிகார மோகம் கொண்ட ஆளுநர் கிரண்பேடியின் மாற்றம் காலதாமதமான நடவடிக்கை – ஸ்டாலின்

(FilePhoto)

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் மாற்றம் என்பது காலதாமதமான நடவடிக்கை எனவும் தொடக்கத்திலேயே செய்யவேண்டியதை தேர்தல் நெருக்கத்தில் செய்திருப்பது வெறும் கண்துடைப்பு என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அரசியல் சட்டத்தையும் – ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப் பொருளாக்கிய அதிகார மோகம் கொண்ட ஒரு துணை நிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுத்து ஒவ்வொரு நாளும் நெருக்கடியை உருவாக்கியதுடன் அந்த மாநில மக்களுக்கான நலத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த விடாமல் முடக்கி வைத்தவர் துணை நிலை ஆளுநர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக, போட்டி முதலமைச்சராக கிரண் பேடியை செயல்பட அனுமதித்து, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக முடக்கி முறித்துப் போட்டது பாஜக அரசு என முக ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு தேர்தலுக்கு மூன்று மாதங்கள் உள்ள நிலையில் ஆளுநரை மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம் எனவும் அவர் சாடியுள்ளார்.

இதேநேரம் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை வைத்து பாஜக செய்த தரம் தாழ்ந்த அரசியலையும் – அந்த மாநிலத்தின் முன்னேற்றத்தைப் பாழ்படுத்திய மிக மோசமான செயலையும் புதுச்சேரி மக்கள் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்’எனவும் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.