July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“4ஆவது டெஸ்ட் கிரிக்கெட்” : இந்தியாவுக்கு சவால் விடுக்கும் அவுஸ்திரேலியா

(Photo: BCCI /Twitter)

இந்தியாவுக்கு எதிரான நான்காவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா சவால் விடுக்கும் எதிர்பார்ப்புடன் நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் அதன்படி 54 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 369 ஓட்டங்களைப் பெற்றதுடன் பதிலளித்தாடிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்களுடன் மூன்றாம் நாளை ஆரம்பித்தது.

செட்டிஸ்வர் புஜாரா 8 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் அஜின்கெயா ரஹானே 2 ஓட்டங்களுடனும் களமிறங்கினர்.

இவர்கள் பெரிதாகப் பிரகாசிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். 186 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில் இணைந்துகொண்ட வொஸிங்டன் சுந்தரும், ஸர்துல் தாகூரும் அபாரமாக விளையாடி 123 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை கௌரவமான நிலைக்கு கொண்டுவந்தனர்.

வொஸிங்டன் சுந்தர் 62 ஓட்டங்களையும், ஸர்துல் தாகூர் 67 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணி மூன்றாம் நாள் பிற்பகலில் 336 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் ஜொஸ் ஹஸல்வூட் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், மிச்செல் ஸ்டார்க், பெட் கமின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

33 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களை மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

டேவிட் வோனர் 20 ஓட்டங்களுடனும், மார்க்கஸ் ஹெரிஸ் ஓர் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.