July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் ‘ஜனநாயகத்தின் மீதான வன்முறைகளுக்கு’ உலகத் தலைவர்கள் கண்டனம்

அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்தும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் குறித்தும் உலக தலைவர்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குடெரெஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலைகளில் அரசியல் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களை வன்முறைகளை கைவிடுமாறு வலியுறுத்துவது அவசியம் எனத் தெரிவித்துள்ள அவர், ‘ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுமாறும் சட்டத்தின் ஆட்சியை மதிக்குமாறும் அரசியல் தலைவர்கள் தமது ஆதரவாளர்களை கேட்டுக்கொள்ளவேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விடயங்கள் அவமானகரமானவை என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சர்வதேச அளவில் ஜனநாயகத்திற்கு ஆதரவான நாடு. அங்கு அமைதியான முறையில் முறையில் ஆட்சி மாற்றம் இடம்பெறுவது அவசியமாகும்’ எனவும் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்ல்ஸ் மிஷெல் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் ஜனநாயகத்தின் ஆலயம் என தெரிவித்துள்ள அவர், ஜோ பைடனிடம் அதிகாரத்தை அமைதியான முறையில் அமெரிக்கா வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

‘அமெரிக்க நாடளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை ஜனநாயகத்தின் எதிரிகள் வரவேற்பார்கள்’ என ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் தெரிவி;த்துள்ளார்.