
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டும் என, பிரித்தானியாவை இந்தியா வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2000 ஆம் ஆண்டளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் பிரித்தானியா சேர்த்தது.
எனினும், யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இலங்கையில் எந்த விதமான வன்முறைகள் இடம்பெறாததையடுத்து, புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, புலிகள் மீதான தடையை பிரிட்டன் நீக்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அண்மையில் செய்தி வெளியானதுடன், இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் புலிகள் மீதான தடையை பிரிட்டன் நீக்கக்கூடாதென அந்நாட்டு உள்துறை அமைச்சிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாஸ ஆகியோரின் படுகொலைகளுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.