April 30, 2025 23:38:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

” கட்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” -நடிகர் விஜய்

எனது தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கட்சிக்கு எனது பெயரையோ புகைப்படத்தையோ உபயோகித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்தரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஒன்றை தேர்தல் ஆணையகத்தில் இன்று பதிவு செய்ததாக தகவல் வெளியானது.

மேலும் இந்த கட்சியின் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் சின்னம் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியாகும் என தகவல் பரபரப்பாக ஊடகங்களில் வெளியானது.

இதையடுத்து நடிகர் விஜய் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், ” என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் அரசியல் கட்சியை ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன்.

அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று விஜய் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 விஜய்க்கு எந்த சம்பந்தமும் இல்லை:

அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்.ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
அரசியல் கட்சியைப் பதிவு செய்வது எனது தனிப்பட்ட முயற்சி. விஜய் மக்கள் இயக்கம் இன்று நேற்று தொடங்கப்பட்டதல்ல, உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி.
எதிர்காலத்தில் இந்த இயக்கத்தில் விஜய் இணைவாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.
விஜயின் ரசிகனாக நான் இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இவ்வாறு அரசியல் கட்சியை தொடங்கியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.