July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மம்தா பானர்ஜி தலைமையிலான முன்னணியில் சேரத் தயார்; அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

இந்தியாவில் மாற்று அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இதன் பிரதிபலனாக உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் திடீரென ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆளும் மாநிலமாக உத்தர பிரதேசம் இருந்து வருகிறது.இதற்கு முன்னர் 2012 முதல் 2017 வரை அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தான் உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்து வந்தது

2017இல் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர்.ஆனால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜகவிடம் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

இந்நிலையில் இந்திய அரசியலில் வலுவான ஒரு எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் மம்தா பானர்ஜி அரசியல் தலைமைகளிடம் பேசி வருகிறார்.
அவரே பல மேடைகளில் அதனை தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்நிலையில் அங்கு வியூகங்களை வகுத்து தேர்தலில் போட்டியிட மம்தா பானர்ஜி முனைந்து வருகிறார்

அங்கு தற்போது எதிர்கட்சியாக இருக்கும் சமாஜ்வாதி கட்சி மம்தா பானர்ஜி தலைமையிலான அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிலும் தற்போது இந்தியாவில் பெரும்பான்மை எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது காங்கிரஸுக்கு செல்வாக்கு இல்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் வலுவான எதிர்கட்சியாக காங்கிரஸ் இல்லை என எதிர்க்கட்சிகள் குறை கூறிவரும் நிலையில், உத்தரப் பிரதேச மக்கள் காங்கிரஸை அங்கீகரிக்க மாட்டார்கள் எனக் கூறியுள்ள அகிலேஷ் யாதவ், நடைபெறவுள்ள உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸுக்கு பூச்சியம் தான் கிடைக்கும் என விமர்சித்துள்ளார்.

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு சவால் விட தயாராகியுள்ள மம்தா பானர்ஜி, அதற்கான தளத்தை அமைக்க மும்முரமாக இருக்கிறார் என அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆகவே மம்தா பானர்ஜி தலைமையிலான மாற்று அரசியல் முன்னணியில் சேர தயாராக இருப்பதாக உத்தர பிரதேச எதிர்க் கட்சித்தலைவர் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்கு வங்க மாநில தேர்தலில் பாஜகவை தோல்வியடையச் செய்த மம்தா பானர்ஜியால் உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் கட்சி ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.

மம்தா பானர்ஜியை வரவேற்பதாக கூறியுள்ள அகிலேஷ் யாதவ், மேற்கு வங்கத்தில் பாஜகவை அவர் வீழ்த்திய விதம் வரவேற்புக்குரியது எனவும் ஆதலால் உத்தரப் பிரதேச மக்களும் பாஜகவை தோற்கடிப்பார்கள்‌ எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.