May 24, 2025 8:26:33

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்

ஹைதராபாத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்.

அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இரவு 8 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்ததாக அவரது மகன் தகவல் தெரிவித்துள்ளார்.

நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் நடனம் அமைத்துள்ளார்.

சுமார் 800 க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்து விருதுகளை பெற்றுள்ளார் சிவசங்கர் மாஸ்டர்.

தமிழில் நடிகர் சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற காமெடி படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் .

வரலாறு, பரதேசி, அரண்மனை, கஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அஜித்தின் வரலாறு, தனுஷின் திருடா திருடி படத்தில் இடம்பிடித்த ‘மன்மதராசா’ பாடல் போன்றவற்றுக்கு நடனம் அமைத்துள்ளார்.

தெலுங்கில் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘தீரா தீரா தீரா’ பாடலுக்கு நடனம் அமைத்து தேசிய விருதையும் வென்றார் சிவசங்கர் மாஸ்டர்.

கொரோனாவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவரது மருத்துவ சிகிச்சைகளுக்கு போதிய பணம் இல்லாததால், அவரது மகன் அஜய் கிருஷ்ணா திரை பிரபலங்கள் உதவுமாறு கோரிக்கை வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவசங்கர் மாஸ்டரின் மறைவு இந்திய திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என ‍அனைத்து தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.