October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியா – சீனா இடையிலான உறவு மோசமான நிலையில் உள்ளது; இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

அண்மைக்காலமாக இந்தியா – சீனா இடையேயான உறவில் விரிசல்கள் அதிகரித்துவரும் நிலைமையையே செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.

இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருக்கிறார்.

எல்லைப் பகுதிகளில் அத்துமீறல், குடியிருப்புக்களை அமைத்தல், கண்காணிப்பு என பல்வேறு நடவடிக்கைகளில் சீனா அத்துமீறி வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருக்கிறது.

இந்நிலையில், சிங்கப்பூரில் நடந்த புளூம்பெர்க் புதிய பொருளாதார மன்ற நிகழ்வில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா – இந்தியா இடையிலான உறவு மோசமான நிலைமையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இரு நாடுகளுக்கிடையில் போடப்பட்ட ஒப்பந்தங்களை மீறிய செயலுக்கு சீனா இன்னும் நம்பத் தகுந்த விளக்கத்தை கொடுக்கவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

லடாக் மோதலால் இந்திய, சீனா எல்லையில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சிங்கப்பூர் நிகழ்வில் இந்த கருத்தை தெரிவித்து உள்ளார்.

இந்தியா, சீனா இருதரப்பு இடையிலான உறவு மோசமான பாதையில் செல்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது எல்லைப் பகுதிகளில் இன்னும் பதற்றம் அதிகரித்திருப்பதாகவே
தெரிகிறது.